மே மாதம் 2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நிலவிவந்த ஒற்றுமையை அதன் தலைமையான இரா சம்மந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் திட்டமிட்டு சிதைத்துவிட்டனர் எனவும், கூட்டமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களதும், மக்களினதும் செயற்பாட்டாளர்களினதும் பங்களிப்பு இல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு அவசரத் தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்ததாகவும் தமிழ் காங்கிரசால் குற்றம் சாட்டப்படுகின்றது.
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற அமைப்பு எங்கு நடந்த கூட்டத்தில் எப்படி உருவாக்கப்பட்டது. அதில் யார் யார் எல்லாம் பங்குபற்றினார்கள்? அதன் தலைவர் யார்? அதன் செயலாளர் யார்? இவை எதுவும் தமிழ் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் ஒத்துழைப்பின்றித்தான் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் தயாரித்ததாகக் கூறுகின்றவர்கள் குறைந்தபட்சம் அப்படி எதிர் கருத்துள்ளவர்களுக்காவது தமது தேசியத்திற்கான மக்கள் முன்னணி உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்தார்களா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவிற்குக் காரணம் சம்பந்தன், சுரேஷ், மாவை எனக் கூறுபவர்கள் அவர்கள் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேருக்கு புதிய முன்னணி அமைக்க அழைப்பு விட்டனர். திருமலையில் தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுபவர்களுக்கு இப்படி ஒரு முன்னணி உருவானதைப் பற்றியாவது தெரியுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது அது ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து சம்பந்தன், மாவை, சுரேஷ், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய ஐவரைக் கொண்ட தலைமைத்துவமாகவே இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் இருந்ததுடன் தமிழரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமைத்துவத்தை சார்ந்தவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும் இருந்தார்கள்.
இவர்கள் தவிர மேற்கண்ட கட்சிகள் சார்பாக தேர்தலில் வெற்றியடைந்துவந்த பிரதிநிதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வன்னியிலும், யாழிலும், கிழக்கிலும் நியமிக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்கியதாகவே இக் கூட்டமைப்பு இருந்தது. இதில் மூவரை மட்டும் பெயர் குறிப்பிட்டு சிதைவிற்கு காரண கர்த்தாக்கள் எனக் குற்றம் சாட்டும் கஜேந்திரகுமார் ஏன் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ஏனையோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது ஒன்றே இவர்களின் பொய்யான முகமூடிகளைக் காட்டவில்லையா?
மே மாதம் 2009 ஆம் ஆண்டிற்குப் பின் நாம் எமது கொள்கையில் இருந்து தடம் புரண்டோம் புதிய தீர்வுத் திட்டம் என்ற ஒன்றைத் தயாரித்தோம் என்று கூறும் பத்மினி, கஜேந்திரன் ஆகியோரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். மே 2009 ற்கு முன்னரும் பின்னரும் நீங்கள் எங்கிருந்தீர்கள்? உங்களுடன் கலந்துரையாடவில்லை எனக் கூறும் நீங்கள் நோர்வேயிலும், இங்கிலாந்திலும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். வருடக் கணக்காக வெளியில் இருந்த நீங்கள் இதற்கு மேலும் பாராளுமன்றத்தில் லீவு எடுக்க முடியாது. பதவிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொழுது பாய்ந்தடித்து கொழும்பிற்கு வந்த நீங்கள் ஏன் ஒரு வருடம் முன்னரே வந்திருக்கக்கூடாது?
இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று தம்முடன் கலந்து பேசாமல் ஓர் தீர்வுத்திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம் என்பது. அத்தீர்வுத் திட்டமானது கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருக்கின்றது என்பதும் அவர்களது வாதம்.
தீர்வுத் திட்டத் தயாரிப்பொன்றை மேற்கொள்வதற்காக இலங்கையில் இருந்த சம்பந்தன், கஜேந்திரகுமார், மாவை, சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழு (அப்பொழுது செல்வம் அடைக்கலநாதன் இங்கிருக்கவில்லை) கூட்டமைப்பின் ஆதரவு சக்தியான ஓர் சட்டத்தரணிகள் குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஓர் வரைவை உருவாக்கும்படி அவர்களைக் கேட்டிருந்தோம். இக் கூட்டத்திற்கு கஜேந்திரகுமாரும் வந்திருந்தார். நாங்கள் கலந்துரையாடியது போக மேலதிகமான ஆலோசனைகள் இருப்பின் மின் அஞ்சல் ஊடாக அனுப்பும் படியும் சட்டத்தரணிகள் கேட்டிருந்தனர். இக் கூட்டம் முடிந்ததும் இங்கிலாந்து சென்ற கஜேந்திரகுமார் அவர்கள் இறுதிவரை தனது ஆலோசனைகள் என்னவென தெரிவிக்கவில்லை.
இரண்டாவதாக பலமாதங்களாக நாம் கேட்டுக்கொண்ட வரைபு (Draft) பூர்த்தி அடையாமல் இருந்தது. இதற்கு சட்டத்தரணிகளுக்கு நெருக்கடியாக இருந்த வேலைகளும் ஒரு காரணம். எனவே இவற்றை முடிப்பதற்கு இலண்டனில் இருந்த கஜேந்திரகுமாரையும் அழைத்தோம். அவருக்கு மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் தேவையாக இருந்தது. இங்கு சட்டத்தரணிகளுக்கு அவர் வரும் நாட்களில் நேரப்பிரச்சினை இருந்தது. இந்த சமயத்தில் தான் சில நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து ஓர் வரைபை செய்து முடித்தோம்.
பின்னர் இவ் வரைபு பாராளுமன்றக் குழுவின் கருத்தை அறிவதற்காக அவர்கள் முன் வைக்கப்பட்டது. வரிக்கு வரி விவாதிக்கப்பட்டது. இதில் திருத்தங்கள் தேவையா என ஆலோசனை கேட்கப்பட்டது. சிலரால் திருத்தங ;கள் முன் வைக்கப்பட்டன. இதில் மிகப் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வரைபை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றோருக்கு முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் கஜேந்திரகுமார், பத்மினி போன்றோர் சட்டத்தரணிகள் உடனான கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்பட்டனர். அங்கும் பல மணிநேரம் விவாதித்து தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
இதிலுள்ளவற்றை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முன் வருமானால் அது பெரிய விடயம்” என்ற பதிலைத்தான் அன்று கஜேந்திரகுமார் சட்டத்தரணிகளிடம் கூறினார். இவர் தான் இன்று கூறுகின்றார் மூன்று பேர்களால் இரகசியமாக உருவாக்கப்பட்ட ஓர் தீர்வுத் திட்டம் என்று. ஓர் வரைபு உருவாக்கப்பட்டால் தான் அதில் உள்ள சரி பிழைகள், என்ன மாற்றம் செய்ய வேண்டும் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசலாம். அதனைத் தான் நாங்கள் செய்தோம். அதன் பின்னர் விவாதித்தோம், திருத்தினோம் என்பது தான் உண்மை. எந்த ஒரு வரைபும் இல்லாமல் ஒரு விடயத்தைப் பேசுவோமாக இருந்தால். அது பேசிய இடத்துடன் முடிந்துவிடும். அந்த அடிப்படையில் தான் எம்மால் ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருக்குமானால் வேறு ஒரு வரைபை முன்வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் தத்துவங்களைப் பேசுவோர் அது எதனையும் முன் வைக்கவில்லை. எனவே தமக்குத் தெரியாமல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது முழுமையான பொய்யாகும்.
இப்பொழுது இன்னுமொரு விடயத்தை முன்வைக்கின்றார். அதாவது “தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் தாயகம், தமிழ் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு” இவை 2001, 2004 ஆம் ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சுட்டிக்காட்டப்பட்டன. இதிலிருந்து யாரும் விலகமுடியாது என காங்கிரஸ் கஜேந்திரகுமார் கூறுகின்றார். இதை கஜேந்திரகுமார் சொல்லித்தான் யாரும் அறியவேண்டியதல்ல. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும், 1985 திம்புப் பிரகடனமாகவும் அதனை வெளியிட்டவர்கள் கூட்டணியும், ரெலோவும், ஈபிஆர்எல்எப், எல்ரீரீ போன்ற அமைப்புக்கள். கூட்டமைப்பில் இருக்கும் வுநுடுழுவும், நுPசுடுகுஉம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள். அதேபோன்று வடக்கு கிழக்கு இணைப்பதற்கு இறுதிவரை போராடியது கூட்டணி, அதிலும் பிரத்தியேகமாக திரு சம்பந்தனின் தனிப்பட்ட முயற்சி இதில் மிகவும் கனதியானது.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம், அவர்கள் தொடர்ச்சியான நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கென தனித்துவமான மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் உள்ளன. அவர்களது பிரதேசத்திற்கான பொருளாதார வளங்கள் உண்டு. இந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாரும் மறுதலித்தது கிடையாது. இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காணி, பொலிஸ், நிதி உட்பட முழுமையான அதிகாரப் பகிர்வொன்று சமஷ்டி அரசியல் அமைப்பு முறையின் ஊடாக உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது. இதனை எந்த ஒரு இடத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது கிடையாது.
“சிறீலங்;காவின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் வட்டுக்கோட்டைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது” என்றும் தாம் மாத்திரம் தான் மேற்கண்ட கொள்கைகளில் உறுதியாக இருப்பது போன்ற புலுடாவை விட சிலர் ஆரம்பித்துள்ளனர். சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறிக்கொள்பவர்கள் என்ன அடிப்படையில் ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசிற்கும் அதன் அரசியல் சாசனத்திற்கும் விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்கின்றார்கள்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பொழுதும், வெற்றி அடைந்து பாராளுமன்றத்திற்குப் போகும் பொழுதும், இந்த சத்தியப் பிரமாணத்தைச் செய்து தானே போகின்றார்கள். அப்பொழுது சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? தமிழ் மக்களுக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது, ஏமாற்றிவிடலாம் என்று சிந்திக்கின்றார்களா? உண்மையாகவே சிறீலங்காவின் இறையாண்மையை இவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடின் பாராளுமன்ற அரசியல் முறையைக் கைவிட்டு அவர்கள் சொல்கின்ற தனித்துவத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராட வேண்டும். அப்படிச் செய்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதனை விடுத்து சொல் வேறாகவும், செயல் வேறாகவும் இருப்பது சுத்த ஏமாற்றுவித்தையே தவிர வேறல்ல.
இவை ஒருபுறம் இருக்க இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் இவர்கள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இத் தத்துவத்தையே கூறிக்கொண்டிருக்கப் போகின்றார்களா? இல்லையேல் இதன் அடிப்படையில் ஏதாவது தீர்வுத் திட்டம் இவர்களிடம் உண்டா? இனப்பிரச்சினைத்தீர்வின் அடுத்த கட்டம் நோக்கி எவ்வாறு பயணிக்கப் போகின்றோம். சுலபமாகத் தத்துவம் பேசலாம். அதற்கான காரண காரியங்களையும் விளக்கலாம். ஆனால் அவையெல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வை ஏற்படுத்தித் தருமா?
முப்பது வருட அகிம்சைப் போராட்டம் 30 வருட ஆயுதப் போராட்டத்தின் பின் தோல்வியுற்ற தீர்வுப் பாதைக்கு, மீண்டும் திரும்புகின்றோம் என குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 60 வருடப் போராட்டத்தின் பின் எதுவும் இல்லை என ஒதுங்கப் போகின்றோமா? அல்லது காங்கிரஸ் கஜேந்திரகுமார் போல் தத்துவம் பேசுவோம் ஆனால் தீர்வைப் பற்றி அக்கறை இல்லை என இருக்கப் போகின்றோமா? அல்லது தமிழ் மக்களின் தேசம், தேசியம், இறைமை இவற்றைக் காப்பாற்றக் கூடிய ஒரு தீர்வை நோக்கிப் போகப் போகின்றோமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரட்டுத் தனமாக தத்துவம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை.
அதே சமயம் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வை நோக்கி நாம் போக வேண்டுமென விரும்புகின்றோம். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலம் பொருந்திய அமைப்பாக இருந்த பொழுது அவர்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இருந்தது. அதன் ஊடு தமிழ் மக்களுக்கு உச்சபட்ச அதிகாரங்களை அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். மாறாக இராணுவப்பலம் சிறீலங்கா இராணுவத்தால் நிர்மூலம் செய்யப்பட்டது. யுத்தத்தில் வென்ற அரசு தமிழர்களுக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. புலிகளும் இல்லை. எமக்கு பேரம் பேசும் வலுவும் இல்லை. இந்த நிலையில் அடுத்த கட்டத்தை நகர்த்துவது என்பதை சிந்திக்கவேண்டும்.
இன்று எமக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சாதகமான நிலைமை சர்வதேச சமூகம் காட்டக் கூடிய குறைந்தபட்ச அக்கறை. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இன்னும் பல நாடுகளும் எமது இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள். எனவே இவர்களின் ஆதரவுடன் தீர்வொன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதே புத்திசாலித்தனமான சிந்தனையாக இருக்க முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாம் பெற்றுக் கொள்ளவேண்டுமாயின், எமது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் கடும் போக்காளர்கள் என்னும் தன்மையைக் காட்டிக்கொள்ளாமல் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் அதிகாரங்களுடன் தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். அப்படியான ஓர் திட்டத்தைத்தான் கூட்டமைப்பு உருவாக்கியது.
எமது தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகம் நிராகரிப்பது கடினமானது ஏனெனில் உலகின் பல பாகங்களில் இவ்வாறான சமஸ்டி அரசியல் அமைப்பு முறையிலான தீர்வுத்திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் 13வது திருத்தத்தையே கொடுக்க விரும்பாத இலங்கை அரசு அவ்வாறான தீர்வுத் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளமாட்டாது என்பதையும் நாங்கள் அறிவோம். இந்த நிலையில் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை இலங்கை நிராகரிக்கும் பொழுது இலங்கை மீது அழுத்தம் செலுத்தவோ, அல்லது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு வேறு வழிமுறைகளை கையாளவேண்டிய தேவையோ சர்வதேசத்திற்கு ஏற்படலாம். எனவே கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதேசமயம் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமாகவே இதனை நாம் தயாரித்தோம்.
இதன் மூலம் சர்வதேச சமூகத்தை எமது ஆதரவு சக்தியாக மாற்றமுடியும் என்பதுடன், அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நியாயமான தீர்வுக்கெதிரான போக்குகளையும் சர்வதேச அரசுகள் புரிந்துகொள்ளச் செய்யலாம். ஆனால் இதனை விடுத்து இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது. இலங்கை இலங்கை இரு தேசங்களின் கூட்டு எனக் கூறும் பொழுது வெளி உலகமோ, சர்வதேச சமூகமோ சரி எமக்குக் கிட்டவும் நெருங்கியும் வராது. இதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
வன்னியில் மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் இவர்களது வாழ்விடங்கள் வாழ்வாதாரங்கள் எல்லாமே அழிக்கப்பட்டு விட்டது. 30வருட யுத்தத்தில் இழக்கக்கூடாத சகலவற்றையும் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பால் நிரம்பிவழிகின்றன. இராணுவக் குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை எமது கையை விட்டுப் போகும் சூழல். இந்த நிலையில் மிக விரைவில் வடகிழக்கின் அதிகாரத்தை எமது கையில் எடுக்கப் போகின்றோமா? அல்லது தத்துவம் பேசிவிட்டு உட்காரப் போகின்றோமா?
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் தேசம், தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமை எதனையும் விடவில்லை. ஆனால் தந்திரோபாயமாக இன்றிருக்கும் எமக்கு சாதகமாக சர்வதேச சூழலைப்பயன்படுத்தி தீர்வைக்காண முயற்சிக்கின்றோம். ஆனால் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எந்தத் தீர்வுத்திட்டமும் இல்லாமல் கூட்டமைப்பை விமர்ச்சிப்பதும் குற்றம் சுமத்துவதும் அர்த்தம் அற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும்.
தேசம், தேசியம், இறையாண்மை எல்லாவற்றையும் விடுத்து இந்தியா கூறியது போன்று நாம் தீர்வுத் திட்டம் தயாரித்ததாகவும் இவர்கள் கூறுகின்றார்கள். இது சுத்த அபத்தமானதும் பைத்தியக்காரத்தனமானதுமாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தீர்வு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியது கிடையாது. அது தொடர்பாக நாம் கலந்துரையாடியதும் கிடையாது. மாறாக புலிகள் அழிக்கப்பட்ட சூழ் நிலையிலும் இலங்கை அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்காத சூழ் நிலையிலும் நாம் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதன் மூலமே சர்வதேசத்தை எம்மை நோக்கி அணி திரளச் செய்ய முடியும் என யோசித்தோம். அந்த அடிப்படையில் மிக நீண்ட கலந்துரையாடல்களின் பின்பே ஒரு வரைபு உருவாக்கப்பட்டது. (அதன் விபரம் மேலே தரப்பட்டது)
கடந்த ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என அறிக்கை விடுத்த திரு கஜேந்திகுமார் அடுத்த கணமே இலண்டன் சென்றுவிட்டார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சிலநாட்களின் பின்னர் வந்தார். கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றென்ற வகையில் வேட்புமனுக்களைப் பரிசீலிக்கும் குழுவில் அவரும் ஒரு அங்கத்தவர் என்ற வகையில் அவரும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தனக்கு அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறியதன் அடிப்படையில் அது தொடர்பாக இரண்டு மணி நேரம் கலந்துரையாடப்பட்டது. தனது கட்சிக்குழுவில் பேசி முடிவெடுத்துவிட்டு மாலை எமக்கு அறிவிப்பதாக கூறியவர் இரண்டு நாட்களாக எம்முடன் தொடர்பு கொள்ளவில்லை. எமது தொலைபேசித் தொடர்புகளையும் அவர் பேசாமலேயே நிராகரித்தார். இதன் பின்பு காங்கிரசின் தலைவர் திரு விநாயகமூர்த்தியின் முயற்சியால் ஒரு சில சட்டத்தரணிகள் சமரசம் பேச முற்பட்டனர். இவருக்காகவே ஏற்கனவே வரையப்பட்ட தீர்வுத்திட்டத்தை விடுத்து தேர்தலின் பின்னர் எல்லோரும் இணைந்து ஒரு புதிய தீர்வுத்திட்டத்தை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அது எழுத்திலும் உள்ளது. ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் ஏகமனதான முறையில் இத் தீர்வுத்திட்டம் அமையவேண்டும் எனக் கூறினார்.
பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்க முடியுமே தவிர ஏகமனதானதென்று எதற்கும் ஒத்துவராது, எல்லாவற்றையும் மறுதலிக்கும் வீற்றோ அதிகாரத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தோம். இறுதியாக இதனை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்ய சம்மத்தித்தார். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர் தனது செயலாளரையும் இன்னும் இருவரையும் எம்முடன் பேசும்படி கூறிவிட்டு அவர் போய்விட்டார். அவர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் சம்மதம் அளிக்கப்பட்டது. ஆனால் போனவர்கள் மீண்டு(ம்) வரவில்லை. திரு சம்பந்தன் கஜேந்திரகுமாருடன் பேச எடுத்த முயற்சியும் சில சட்டத்தரணிகள் (ஏற்கனவே சமரசம் பேசியவர்கள்) அவருடன் பேச எடுத்த முயற்சியும் நிறைவேறவில்லை. அடுத்த நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கஜேந்திரகுமார் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தார்.
இதில் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இலண்டனில் இருந்து வரும் பொழுதே அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்ற முடிவுடனேயே வந்தார். ஆனால் கூட்டமைப்பை சிதறடிக்கக் கூடாது என்பதற்காக நாம் இறுதிவரை முயற்சி செய்தோம். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனை காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியிடமும் அவரது நட்பு சட்டத்தரணிகளிடமும் கேட்டும் தெரிந்கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருக்க எல்லாவற்றையும் திரித்தும் பொய்யாகவும் கூறமுற்படுவது அரசியல் வங்குரோத்துத் தனமே அல்லாமல் வேறல்ல. வெளிநாட்டில் இருக்கக் கூடிய ஓரிரு குழுக்களின் வழிகாட்டுதலில் தான் இது நடைபெறுகின்றது. எமது தமிழினத்தை இன்னும் பாரிய அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதை கடும் போக்காளர்கள் எனத் தம்மைக் கருதுவோர் புரிந்துகொள்ளவேண்டும்.
இறுதியாக தமிழ் தேசியம் பற்றிப் பேசுபவர்கள் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையில் மாத்திரம் தான் போட்டியிடுகின்றார்கள். இவர்களின் தேசம் என்பது இவ்விரு மாவட்டங்கள் மட்டுமாக இருக்கலாம்.
அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஓர் ஆசனம் கேட்டு நிராகரிக்கப்பட்ட கௌரி முகுந்தன் என்பவர் தான் தேசியம் பேசுபவர்களின் திருகோணமலையின் முதன்மை வேட்பாளர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் அலரி மாளிகையில் அங்கத்துவம் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்தவர் தான் இவரின் முதன்மை வேட்பாளர்.
திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்றகடிக்க வேண்டும் என்பது இலங்கை அரசின் திட்டம் அதற்காகவே பல சுயேட்சைக் குழுக்களுடன் பிள்ளையான் போன்றவர்களும் களமிறக்கப்பட்டனர். அவரைத் தோற்கடிக்கத்தான் திருகோணமலையில் காங்கிரசும் போட்டிபோடுவதாக கஜேந்திரகுமாரும் கூறுகின்றார். உங்களுக்கும் ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? திருகோணமலையில் தமிழருக்குக் கிடைக்ககூடிய ஓர் ஆசனத்தையும் இல்லாமல் செய்வதுதான் உங்களது தேசியமா? என்பதை தயவு செய்து சொல்லுங்கள்?
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 02-03-2010 -
No comments:
Post a Comment