Saturday, April 10, 2010

சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் மிகவும் குறைந்தளவு மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும்: த ரைம்ஸ்

சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் இந்த வாரம் நடைபெற்ற பொதுத்தேர்தலே குறைந்தளவிலான மக்கள் வாக்களித்த தேர்தல் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசு நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அது பெற்றுள்ளபோதும், குறைந்தளவான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட மகிந்தாவின் மகன் நமால் ராஜபக்சாவும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்தா அரசு 120 ஆசனங்களை பெற்றுள்ளது. விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.
தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டபோது மகிந்தா அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவில்லை. இரண்டாவது தவணையுடன் நிறைவுபெறும் அரச தலைவர் பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் மாற்றியமைக்க அரசுக்கு இந்த பெரும்பான்மை அவசியம்.
எனினும் சுயேட்சையாகவும், எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்டவர்களை அமைச்சர் பதவிகளை வழங்கி அரசு தனது பக்கம் இழுத்துக் கொள்ளலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டுவதற்கு எமக்கு 12 அல்லது 13 ஆசனங்கள் தேவை, ஆனால் அதனை பெறுவது ஒன்றும் கடினமானது அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சி அரச தலைவர் வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவை கைது செய்ததன் மூலம் ஆசியாவின் பழமை வாய்ந்த ஜனநாயகம் சர்வாதிகாரம் நோக்கி செல்லுகின்றது என்ற அச்சத்தை சிறீலங்கா அரச தலைவர் ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் சிறீலங்காவின் அதிகாரம் ஒரு குடும்பத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரின் குடும்பத்தை சேர்ந்த டசின் கணக்கான உறுப்பினர்கள் அரசின் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் உள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எவ்வளவு மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது தொடர்பில் தேர்தல் திணைக்களம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் 50 தொடக்கம் 55 விகிதமாக அது இருக்கும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிகக்குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும் என அது மேலும் தொவித்துள்ளது.

No comments:

Post a Comment