Saturday, April 24, 2010

எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்


தமிழீழம் நோக்கிய எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு வழிகள் ஊடாகத் தரிப்பிடம் இன்றி பயணித்துக்கொண்டிருக்கின்றது. உரிய உதவிகள் இன்மை, பயணத்திற்கான பாதை தொடர்பில் சர்வதேசத்திற்கு உரிய விளக்கமின்மை, சட்டச் சிக்கல்கள், துரோகங்கள் போன்ற இன்னபிற காரணங்களால் உகந்த தரிப்பிடமின்றி எமது விடுதலைப் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
கடைசியாக எமக்கு முன்னால் கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பமாக நாடு கடந்த தமிழீழ அரசு விளங்குகின்றது. அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொதுத் தேர்தலின் பின்னர் தமிழீழத் தனிநாட்டிற்கான ஒரு அரசு நாடு கடந்து அமையப் போகின்றது என்பது ஈழத் தமிழினத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாக அமையப் போகின்றது.
நயவஞ்சகத்தனத்தால் எமது விடுதலை நோக்கிய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழர்களிடத்தில் தனிநாட்டுக்கான அவா-விருப்பம்-தேவை அற்றுப் போய்விட்டது என்ற சிங்களத்தின் கபடத்தனமான பிரசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்குகொண்டு- அலைஅலையாக நீங்கள் அளிக்கும் வாக்குகள் சிங்களத்தின் உச்சிமண்டையை மீண்டுமொரு தடவை பிளந்தே தீரும்.
புலம்பெயர் தமிழர்களே….
சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென சர்வதேசத்தின் முன் சிங்களம் செய்துவரும் பொய் பிரச்சாரங்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் மூலம் பதிலடி கொடுங்கள்.
சிங்களத்தின் கொடூர கரங்களிலிருந்து தப்பித்து நீங்கள் அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்து உங்களது உரிமை அவாவை உலகிற்கு எடுத்துக் கூறுங்கள். முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டதென்று சொன்னவர்களின் முகத்தில் ஓங்கி அறையுங்கள்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் அண்ணன் உருத்திரகுமாருக்கு கைகொடுங்கள். அவரது உன்னதமான பணி எழுச்சிகொள்ள வழிசெய்யுங்கள்.
நாங்கள் பிரிந்து நிற்பது இனியும் வேண்டாம். புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் ஓரணியாகத் திரள்வோம். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வடிவம் கொடுப்போம். எங்கிருந்தோ எங்கள் தலைவன் எங்களை வழிநடத்துகின்றான். அவன் நேரடியாக வராவிட்டாலும் அவனது திசையிருந்து வருகின்ற காற்றை நாங்கள் எங்களது விடுதலை மூச்சாக மாற்றுவோம்.
சிந்திப்போம்…விரைந்து செயற்படுவோம்..நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதன் மூலம் தனிநாட்டுக்கு சிறந்த அத்திபாரத்தை இடுவோம்.
நெதர்லாந்திலிருந்துதர்சானா

No comments:

Post a Comment