Wednesday, January 27, 2010

ராஜபக்சவின் வெற்றியின் பின்னணியும், பின் விளைவுகளும்: செல்லாக் காசாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க

மேற்குலக அரச தந்திரிகளும், ஊடகவியலாளர்களும் இலங்கைத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்றும் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் காரணிகளாக அமையும் என்றும் எதிர்வு கூறினர். முடிவுகள் அவர்களின் எதிர்வு கூறல்களுக்கு நேர்மாறாக அமைந்தன.
மேற்குலகப் பத்திரிகைகளில் வெளிவந்த "Tamils are the King Makers", "Defeated Tamils a Force Again" "Tamils to Decide Srilankan Poll Results" போன்ற தலைப்புச் செய்திகள் சிங்களவர்களைச் சிந்திக்க வைத்திருக்கும். மேற்குலக அரச தந்திரிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கையின் அரசியல் போக்கையும் அதன் பரிமாணங்களையும் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.
தேர்தலில் முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்பவை:
இலங்கை முழுக்க வாழும் தமிழர்கள் போர் தொடர்பாக ராஜபக்சவின் மீதுள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தனிச் சிங்களப் பகுதிகளில் ராஜபக்ச பொன்சேகா எடுத்த வாக்குகளிலும் பார்க்க இரு மடங்கு வாக்குகள் எடுத்துள்ளார். மொனராகலையில் ராஜபக்ச முப்பத்து நாலாயிரம் வாக்குகளையும் சரத் பொன்சேகா பதினையாயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொன்சேகா நூற்றி ஏழாயிரம் வாக்குக்களையும் ராஜபக்ச நாற்பத்தி இரண்டாயிரம் வாக்குக்களையும் பெற்றுள்ளார். ஒட்டுக்குழுக்களின் அட்டகாசம் பேரூந்துகளில் கொண்டு சென்று இறக்கப்பட்ட சிங்களவர்கள் இப்படிப் பல அட்டகாசங்களுக்கு மத்தியிலும் வன்னி மாவட்டத்தில் ராஜபக்ச 24 ஆயிரம் வாக்குக்களை மட்டுமே பெற்றார். பொன்சேகா 61ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
தமிழர்களும் கலந்து வாழும் கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ச அறுநூற்றி பதினையாயிரம் வாக்குகளும் பொன்சேகா ஐநூற்றி முப்பத்து முன்றாயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். இம்முடிவை சிங்களவர்கள் அதிகம் வாழும் மஹரகம தொகுதியின் வாக்களிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அங்கு ராஜபக்ச 59 ஆயிரம் பொன்சேகா 35 ஆயிரம். முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் கல்முனைத் தொகுதியில் ராஜபக்சவைவிட பொன்சேகா மூன்று மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தனிச் சிங்களப் பகுதிகளைப்போல் ராஜபக்ச பொன்சேகாவைவிட இருபங்கு வாக்குகள் பெறமுடியவில்லை. மாத்தளை மாவட்டத்தில் ராஜபக்ச 157 ஆயிரம் பொன்சேகா 100 ஆயிரம். மாத்தளைத் தேர்தல் தொகுதியில் ராஜபக்ச 27 ஆயிரம் வாக்குகள் பொன்சேகா 26ஆயிரம் வாக்குகள். மலையகத் தமிழர்களும் போரில் ராஜபக்ச நடந்துகொண்டமைக்கு எதிராக வாக்களித்தனர் என்று துணிந்து கூறலாம்.

செல்லாக் காசாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க

இலங்கையின் இரு முன்னாள் பிரதம மந்திரிகளின் மகளும் இருதடவை இலங்கைக் குடியரசுத் தலைவியாக இருந்தவருமான சந்திரிகா பண்டார நாயக்க சரத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அவரது பரம்பரைச் சொத்தாகக் கருதப்படும் அத்தனகல்ல தொகுதியில் மஹிந்த ராஜபக்ச பெருவெற்றி ஈட்டியுள்ளார். பெரும் நிலப் பிரபுவான அவரது தந்தையால் பெரும் தொகைப் பணம் செலவழித்து உருவாக்கப் பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கைநழுவிப் போனதுடன் அவரது வாரிசு தனது அரசியல் எதிர்காலத்தை இழந்துள்ளார்.

சுயநிர்ணய உரிமை அற்ற தமிழர்கள்

தமிழர்களுக்கு இலங்கையில் சுய நிர்ணய உரிமை கிடையாது அவர்கள் வாக்களிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை இத்தேர்தல் உணர்த்தி நிற்கிறது. தமிழர்கள் ஏன் எனக்கு வாக்களிக்கவில்லை அதற்கு செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையில் யாரும் இறங்கப்போவதில்லை. மாறாக அவர்களை எப்படிப் பழிவாங்கலாம் என்ற போக்குத்தான் இனிக்காணப்படும். ஜே.ஆர்.ஜயவர்தனேயும் இதைத்தான் செய்தார். இன்னும் பத்துத் தலைமுறைக்கு தமிழர்கள் போராட்டம் ஆரம்பிக்காமல் இருக்கும்படி செய்ய வேண்டும் என்ற ராஜபக்சக்களின் வேலைத் திட்ட்ம தொடராமல் இருக்க தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.

தமிழர்கள் தமக்கு வாக்களிக்காமல் மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எந்த ஒரு சிங்களக் கட்சியாவது கருதும் பட்சத்தில் அவர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் என்பதை தேர்தலன்று யாழ்ப்பாணத்தில் வெடித்த 13 குண்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

போர்குற்றம் மேற்குலகம் எதிர் ராஜபக்சக்கள்

ராஜபக்ச மேற்குலக விரோதிகளான சீனா, ஈரான், மியன்மார், சூடான் ஆகிய நாடுகளுடன இணைந்து செயற்பட்டமை மேற்குலகை ஆத்திரமூட்டச் செய்து அவருக்கு மிக இலகுவாகக் கிடைக்க வேண்டிய தேர்தல் வெற்றியை சற்று சிரமப்பட்டு கிடைக்கச் செய்தது மேற்குலகம். இனி போர்குற்றம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அவரை அடிபணிய வைக்க மேற்குலகம் முனைப்புக்காட்டும். அவர் மேற்குலகுடன் இணங்கிப் போவாரா அல்லது முரண்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போர்குற்றத்திற்கான முதல் தர சாட்சி சரத் பொன்சேகா. அவரை மஹிந்த அரசு கைது செய்து ஆயுத ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிறையிலிட்டு வெளிவராமல் செய்யலாம்.

தன்வினையால் சுடப்படும் பொன்சேகா
தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஒன்றாக ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தன்னுடன் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 400 பேர்வரை அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவருடனும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 400 பேருடனும் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா முகாமிட்டுள்ளார் என்றும் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமைந்தால் இராணுவ புரட்சி ஒன்றை மேற்கொள்வதற்காகவே பொன்சேகா இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளார் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தப்பி ஓடவிடாமல் அவரைக் கைது செய்ய இந்த முன்னேற்பாடா?
சரத் பொன்சேகா தமிழர்களுக்கு செய்த அநியாயத்திற்கு இனி அநுபவிப்பார். சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரை அரசன் அன்று அறுக்கிறான் என்றால் ராஜபக்சக்களை நின்று அறுப்பது யார்?
- வேல்தர்மா

No comments:

Post a Comment