திங்கட்கிழமை, 11 சனவரி 2010, 02:03.54 AM GMT +05:30 ]
தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் பலரும் இலங்கை அரசிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை இராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார்.
வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார்.
கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டித்துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர், ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள்.
இவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
அவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் ஏற்கனவே இக்கோரிக்கையை இலங்கை அரசிடம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment